click me

Tuesday, November 6, 2012

ஆசியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் சீனாவுடன் இந்தியா போரிட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டது.ஒரு பார்வை


கடந்த 1962ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி தொடங்கிய இந்த போர் நவம்பர் 21ம் தேதி சீனா அறிவித்த ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்துடன் முடிவுக்கு வந்தது.
போரில் மத்திய ரிசர்வு படையைச்சேர்ந்த 634 பேர் உயிரிழந்ததுடன் இந்தியா தோல்வியையே சந்தித்தது. இந்த போர் மூலம் இரு நாடுகளும் உரிமை கோரிய, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் வட கிழேக்கேயிருக்கும் அகாய்ச்சின் பகுதியை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
அதேநேரம் தெற்கு திபெத் என்று சீனா அழைக்கும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளை சீன இராணுவம் கைப்பற்றியும் எவ்வித நிபந்தனையும் இன்றி அங்கிருந்து சீனா வெளியேறியது.
அதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையே பெரிய அளவிலான இராணுவ மோதல் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அவ்வப்போது எல்லையில் பதற்றம் காணப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் 20ம் தேதி தலைநகர் புதுடெல்லியில் இறந்த மத்திய ரிசர்வு படை வீரர்களுக்காக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியல் மத்திய உள்துறை அமைச்சரான சுஷில் குமார் ஷிண்டே தலைமை தாங்கினார். மற்றம் கபில் சிபல், ராஜீவ் சுக்லா, சல்மான் குர்ஷித் என மத்திய அமைச்சர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
பிரச்சினைக்கான காரணங்கள்: இந்தியாவின் வட கிழக்கே இருக்கும் அருணாச்சலப் பிரதேசமும், ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த அக்காய்ச்சின் பிரதேசமும் தன்னுடையது என்று சீனா 1950 களில் உரிமை கோரியது.
பிரித்தானிய காலனிய அரசு, திபேத்தியர்களுடன் செய்த எல்லை உடன்பாட்டை சட்டவிரோதமானது என்று சீனா கூறியது. இந்தியாவோ காலனிய ஆட்சியாளர்களால் வரையப்பட்ட மெக் மோகன் எல்லைக் கோட்டை மாற்ற முடியாது என்று உறுதியாக கூறி வந்தது.
எல்லை பிரச்சனை ஒரு புறம் இருக்க சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் 50களின் இறுதிப் பகுதியில் இரு நாட்டுப் படையினரும் அங்காங்கே மோதிவந்தனர். இந்த மோதல்கள் 1962இல் ஒரு யுத்தமாய் உருமாறியது.

அக்டோபர் 20ம் தேதி சீனப் படையினர் வட கிழக்குப் பகுதியிலும்– அக்காய்ச்சின் பகுதியும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். சரியான ஆயுதங்கள் இல்லாத இந்திய இராணுவத்தால் இமயத்தின் உயரத்தில் நடந்த படையெடுப்பை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்தப் போரால் இராணுவ ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளை விட அரசியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளே அதிகம்.
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய இராணுவத்தினரால் சீனாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. லடாக் பகுதியில் சில இடங்களில் மட்டும் இந்தியப் படையினர் எதிர்த்து சண்டையிட்டனர். ஆனால் சீனப் படையெடுப்பு இந்தியாவில் பெரும் அச்சத்தை தோற்றுவித்தது.  அன்றைய பிரதமர் நேரு, வானொலியில் உரையாற்றுகையில் அஸ்ஸாமை இழந்துவிட்டோம் என்றுகூட குறிப்பிட்டார்.
இந்தியா இப்போரை தேசிய அவமானமாக பார்த்தாலும், சீனாவில் இது ஒரு எல்லைச் சண்டையாகத்தான் பார்க்கப்படுகிறது. அந்தப் போரில் சீனாவின் பதில் தாக்குதலுக்கு அஞ்சி இந்தியா வான் படையைக் கூட பயன்படுத்தவில்லை.
தற்போதைய நிலையில் இந்தியப் படைகள் பெருமளவு பலப்படுத்தப்பட்டு விட்டன, எனவே மீண்டும் மோசமாகதோரு இராணுவத் தோல்வி நடக்க வாய்ப்பில்லை என்று சிலர் வாதிடுகின்றனர். அதேநேரம் சீனப் பொருளாதாரத்தின் அளவு இந்தியாவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு பெரியது.
சீனா தனது இராணுவச் செலவினங்களை கடந்த சில ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்து வருகிற இந்நிலையில் எல்லைப் பிரச்சனையை ராஜதந்திர ரீதியாக தீர்க்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்தியாவும் சீனாவும் தமது எல்லைப் பிரச்சனையை தீர்க்க பல சுற்று பேச்சுக்களை நடத்தினர்.
இரு நாடுகளும் இப்பிரச்சனையில் விட்டுக் கொடுக்க வேண்டும் ஆனால் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளின் உரிமையை மாற்றத் தேவையில்லை என்று இருநாடுகளும் 90களில் ஒரு ஒப்பந்தத்தை எட்டின.
ஆனால் இதிலிருந்து சீனா பின்வாங்கிவிட்டது. திபெத்திய புத்த மதத்தினரின் மிக முக்கியமான மடாலயம் அமைந்துள்ள தவாங் பகுதியை தனக்குத் தர வேண்டும் என்று சீனா கூறுகிறது. சீனா கேட்கும் தவாங் பகுதி பிரம்புத்திரா ஆற்றுக்கு வடக்கே அமைந்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை கொடுக்க இந்தியா முன்வராது என்று தெரிந்தும் பேச்சுவார்த்தைகளின்போது பேரம் பேசுவதற்காக இக்கோரிக்கையை சீனா முன்வைக்கிறது.
இந்தியாவும் சீனாவும் தற்போது தத்தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ஒட்டி எல்லைக் கோட்டை தீர்மானிக்க வேண்டும் என்ற யோசனையை மூன்று முறை சீனா முன்வைத்தது. ஆனால் அகாய்ச்சின் பகுதியை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகம் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் என்ற அளவைக் கடந்து விட்டது. இருந்தும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பிரச்சனை அதிகரிப்பது, பாகிஸ்தானுக்கு சீனா பெருமளவில் ஆயுதங்களை வழங்குவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்திவருகிறது.
இதற்கிடையில் இந்தியாவில் இருக்கும் திபெத்திய அகதிகளின் அரசியல் செயற்பாடுகள் குறித்து சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த இரு நாடுகளின் பொருளாதாரங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
அதேநேரம் எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட சில விடங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் கவலைதரும் அளவுக்கு அதிகமாகவே உள்ளன.

No comments:

Post a Comment