click me

Friday, November 23, 2012

வீரபாண்டி ஆறுமுகம் மறைவு கருணாநிதி கண்ணீர்


வீரபாண்டி ஆறுமுகம் உடலைப் பார்த்து கருணாநிதி கண்ணீர்: மிகப்பெரிய தூணை இழந்து விட்டோம்
வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிர்ச்சி  அடைந்தார். உடனடியாக  போரூர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி  ஆறுமுகம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினார்.
 
துக்கத்துடன் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
மிகப்பெரிய  தூணை தி.மு.க. இழந்து விட்டது. போர்ப்படை தளபதியை தி.மு.க.  இழந்துள்ளது. அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. என்னில் பாதி அவர். மாறன் மறைந்த அதே நாளில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, தா.மோ.அன்பரசன், கே.பி.பி.சாமி, கருணாநிதியின்  துணைவியார் ராஜாத்தி அம்மாள், மு.க. தமிழரசு, மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர், முன்னாள் எம்.பி.  கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம், நடிகை குஷ்பு, முன்னாள் மாவட்ட செயலாளர்  பலராமன், முன்னாள்  போலீஸ் அதிகாரி அடைக்கலராஜ், பரிதி இளம்வழுதி,  ரகுமான்கான், வக்கீல் கிரிராஜன், மதன்மோகன் உள்பட  ஏராளமானோர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
 
வீரபாண்டி ஆறுமுகம் உடல் இன்று பகல் 1.30 மணிக்கு போரூர் ஆஸ்பத்திரியில் இருந்து சேலம் கொண்டு செல்லப்படுகிறது. வீரபாண்டியில் உள்ள அவரது  குடும்பத்தினருக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். நாளை பூலாவரி கிராமத்தில் மகன் நெடுஞ்செழியன் சமாதி அருகே வீரபாண்டி ஆறுமுகம் உடல் அடக்கம் நடக்கிறது.

No comments:

Post a Comment