
ஆர்ட்டிக் பகுதியில் கச்சா, எரிவாயு சுரண்ட முதலாளிய முதலைகளின் போட்டி- 2015-இலேயே ஆர்ட்டிக் கடல் பனியற்ற கடலாக மாறும் அபாயம்!1979ஆம் ஆண்டு ஆர்ட்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள், படலங்கள் பற்றிய செயற்கை கோள் தரவுகள் திரட்டப்பட துவங்கின. அப்போது இருந்த கடல்பனியளவு தற்போது பெருமளவு குறைந்து வெகு குறைவான பனிப்பிரதேசமே உள்ளது என்று வானிலை ஆய்வு விஞ்ஞானிகள் சமீபத்தில் எச்சரித்திருந்தனர்.
ஆர்ட்டிக் பனி உருகி வருகிறது ஆர்ட்டிக் முழுதுமே பனியற்ற பிரதேசமாக மாறிவிடும் அபாயம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளில் நிகழும் என்ற எச்சரிக்கை தற்போது செல்லுபடியாகாது. அடுத்த சில ஆண்டுகளிலேயே பனி முழுதும் கரைந்து உருகி ஆர்ட்டிக் பனியற்ற பிரதேசமாக மாறிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பனிப்பிரதேசங்கள் அதிகமாக இருந்தால், பரவலாக இருந்தால் சூரிய சக்தியை அது மீண்டும் விண்ணிற்கே பிரதிபலித்து பூமியின் உஷ்ண நிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பனி உருகிவிட்டால் அதனடியில் உள்ள இருண்ட கடல்நீர் வெளியே தெரியும் ஆனால் பனியில்லாத நீர்ப்பகுதி என்பதால் சூரிய சக்தியில் 90 சதவீதத்தை அது உறிஞ்சிக்கொள்ளும். இதனால் பூமி வெப்பமடைதல் மேலும் உக்கிரமடையும்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கடல் பௌதீக விஞ்ஞானி பீட்டர் வதாம்ஸ் இது குறித்து எச்சரிக்கையில், ஆர்ட்டிக் பகுதி 2015ஆம் ஆண்டிலேயே முழுதும் பனியற்ற பிரதேசமாகிவிடும் என்று எச்சரித்துள்ளார். இதனால் ஏற்படும் வெப்பத்தாக்க விளைவு இதுகாறும் மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகள் இந்த பூமிக்குச் செய்த தீங்கை விட அதிகமிருக்கும் என்று கூறியுள்ளார்.
நாசா விஞ்ஞானியும் பிரபல சுற்றுச்சூழல் பாதுகாப்பு தீவிர கருத்தியலாளருமான ஜேம்ஸ் ஹான்சன் இது பற்றி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளபோது, "நாம் புவியுலக நெருக்கடி நிலையில் இருக்கிறோம்" என்று கூறியுள்ள்தையும் நாம் நினைவு கூரத்தக்கது.
2007ஆம் ஆண்டுதான் ஐ.நா.வின் வானிலை மாற்றத்திற்கான அனைத்து நாடுகள் குழு ஆர்ட்டிக் கடல் பகுதியில் பனி மறைவதற்கு 2,100ஆம் ஆண்டு வரை ஆகும் என்று கூறியிருந்தது. ஆனால் அது இப்போதைய உண்மைகளின் படி உண்மையல்ல.
பனி உருகுவதால் சூரிய சக்தியை உறிஞ்சும் நடவடிக்கையால் வெளியாகும் கரியமில வாயு வெளியேற்றம் மட்டுமல்லாமல் உறைபனியில் புதைந்திருக்கும் மீத்தேன் எரிவாயுவின் வெளியேற்றமும் எதிர்பார்த்ததைவிட அதிகம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உறைபனியில் புதைந்துள்ள மீத்தேனில் 10% விண்வெளிக்கு சென்றால் போதுமானது. இதுவரை மனித உற்பத்தி நடவடிக்கைகளினால் ஏற்பட்டுள்ள புவிவெப்பமடைதலை விட 10 மடங்கு அதிகம் புவி வெப்பமடைதல் துரிதமடையும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமீஸ் நாம் தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமடைதல், கடல் நீர்மட்டம் உயர்தல், இதனால் ஏற்படும் புயல், மழை, வெள்ளம், மற்றும் வறட்சி ஆகியவற்றினால் 2030ஆம் ஆண்டுவாக்கில் சுமார் 10 கோடி உயிரிழப்பர் என்று ஒரு அறிக்கை சமீபத்தில் எச்சரித்திருந்தது.
மேலும் 2030 முதல் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் கடுமையான வானிலை மாற்றங்களுக்கு பலியாவார்கள் என்றும் சுற்றுச்சூழல்வாதிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த சாவுகளில் 90% வளரும் மற்றும் ஏழைநாடுகளிலேயே ஏற்படும் என்பதும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment