click me

Wednesday, October 24, 2012

இதோ நான் வந்து விட்டேன் அல்லாஹ்....



லப்பைக்....அல்லாஹும்ம லப்பைக்...
லப்பைக்....அல்லாஹும்ம லப்பைக்...

இதோ நான் வந்து விட்டேன் அல்லாஹ்.... இதோ நான்.... ஹஜ்ஜை நிறைவேற்ற செல்லும் ஒவ்வொரு யாத்ரீகரின் இதயமும் இறையச்சத்தில் சங்கமித்து, இதயம் நிறைய வெளிப்படுத்தும் ஒரே உணர்வு.... ஒரே கேவல்..... யா அல்லாஹ்...இதோ நான் வந்து விட்டேன்.... உனக்காக..... உன் கருணைக்காக, உன் அருளுக்காக... உன் தயவுக்காக... நான் வந்து விட்டேன் யா அல்லாஹ் நான் வந்து விட்டேன்...


மீண்டும் ஒரு ஹஜ்...
மீண்டும் ஓர் உம்ராஹ்...
மீண்டும் ஓர் பயணம...
மெய் உலகிலிருந்து கிட்டத்தட்ட இன்னோர் மெய் நிகர் உலகிற்கு..!!

எப்படி ஹஜ் செய்வது, என்ன வழிமுறை என்பது முதல் திரும்பி வருகையில் என்ன கொண்டு வர வேண்டும், நகையா, பொருளா, அஜ்வா பேரிச்சையா? என்னும் லிஸ்ட் வரை எல்லாமே குறித்துக் கொள்கிறோம்... ஆனால் ஹஜ்ஜில் கிடைக்கும் மிக முக்கியமான ‘ரிஜ்க்’கை கொண்டு வருகிறோமா????

...(ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!. (2:197)
ஹஜ்ஜிலிருந்து திரும்பிய பின் நம்முள் என்ன மாற்றம் வேண்டும் என்பதை குறித்துக் கொண்டோமா??? அல்லது, ஒவ்வொரு வருடமும் ”இந்த வருடம் கண்டிப்பாக எடை குறைத்து விடுவேன்”  என்று சூளுரைப்பது போல ஒவ்வொரு ஹஜ்ஜின் பின்னேயும் தூசி தட்டப்படாத ஒரு சபதம் இருக்கிறதா??? என்ன செய்வதாக உள்ளோம் நாம், ஹஜ்ஜின் காலத்திலும், அதிலிருந்து திரும்பிய பின்னரும்?

இதுவரை இப்படி சிந்திக்கவில்லை என்றாலும் இப்பொழுது சிந்திக்கலாம் வாருங்கள். ஹஜ் என்பது தொலைதூரம் பயணப்பட்டு, ஆடை ஆபரணங்களை தவிர்த்து, வெயிலிலும் தாகத்திலும் உடல் வருந்தி செய்யப்படும் ஒரு சம்பிரதாயமல்ல.....ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகனை அல்லாஹ்வின் கட்டளைக்காய் பலிகொடுக்க முன்வந்த அருமை நபி இப்றாஹீமின் வழியில், அவரின் வாழ்க்கையை சற்றே வாழ்ந்து பார்க்கவும், ஆசாபாசங்களை மறந்து, செல்வ சுகத்தையும், செல்லச்செல்வங்களையும் பிரிந்து மனம் வருந்த உடல் வருந்த இன்னோர் உலகில் சில நாழிகை வாழ்ந்து பார்க்கவும், எம் தந்தை இப்றாஹீமின் (அலைஹ்) அழைப்பிற்கு பதிலளித்தவர்களாகவும் செல்லும் ஓர் புனிதப் பயணம். அத்தகு சிறப்பான பயணத்தின் இறுதியில் வெறும் நினைவுகள் மட்டுமே மிஞ்சினால்? சில நாட்களில் வீணாகிப் போகக்கூடிய வெறும் பொருட்கள் மட்டுமே எஞ்சினால்?? இதற்காகவா ஆர்ப்பர்க்கிறோம்??? வாருங்கள் சிந்தனை செய்வோம்...

ஹஜ்ஜின் காலத்தில்:

1. எந்நேரமும் நினைவில் வையுங்கள், நீங்கள் அருமை நபி இப்றாஹீமின் (அலைஹ்) அழைப்புக்கு பதில் சொல்லியவர்களாகப் போகிறீர்கள். ஒவ்வொரு துன்பத்திலும் அல்லாஹ், அவரை சரணடைய சொல்லியபோது, எதற்கு, ஏன், யாருக்கு என்ற ஒரு கேள்வியுமில்லாமல்... நின்னை முழுக்க முழுக்க சரண்டைந்தேன் என்றார். அப்படி அல்லாஹ்வின் மீது அளவிலா அன்பை வைத்தும், அதை செயலிலும் காட்டியதால்தான், அல்லாஹ் அவரை ‘கலீலுல்லாஹ்’வாக்கினான். அவரின் அழைப்புக்கு நீங்களும் பதில் கூறியிருக்கிறீர்கள் என்பதை நினைத்து மகிழ்சியுறுங்கள்.... பணிவு கொள்ளுங்கள்.
2:131. இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.

2. ஹஜ் செய்ய உங்களுக்கு வாய்ப்பளித்தான் என்பதற்காக ஏதோ கடன்பட்டவர்கள் போல நடந்து கொள்ளாதீர்கள்:

ஹஜ்ஜில் ஒவ்வொரு இடத்திலும் உங்களை விட ஏதாவதொரு விஷயத்தில் தாழ்ந்த அல்லது ஹஜ்ஜிற்கு வந்தும் கர்வத்தை விடாத சகோக்களை பார்க்க / பழக நேரிடும்.... அவர்களிடமும் இன்னும் அதிக மான பண்பையும் பணிவையும் காட்டுங்கள். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிட்டியது போல் செருக்கு கொள்ளாதீர்கள்.

(2:197)எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;

3. குறுக்கு வழி தேடாதீர்கள்:
இது ஒரு பெரிய்ய்ய பிரச்சினைதான். அது வாஜிபா? இது ஃபர்ழா? அப்ப இது செய்ய வேண்டாம்லே? இதை விட்டுட்டு அதைப் பார்க்கலாம்....இவற்றை தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்தி இன்னொன்றில் சேர்க்கலாம்......சகோ... மீண்டும் நினைவில் வையுங்கள், ஹஜ் என்பது சம்பிரதாயமில்லை.... ஒவ்வொரு வினாடியையும் ஆழ்ந்து அனுபவித்து ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்.... அரஃபா மைதானத்தில் முழு நாளை எப்படி கழிப்பது என்பதிலிருந்து முஜ்தலிஃபாவின் இருளில் ஐஃபோனை செக் செய்வீர்களா இபாதத்தை பெருக்குவீர்களா என்பதையும் சிந்தனை செய்யுங்கள்....

4. எந்த ரிஜ்க் முதன்மையானது என்பதை முடிவு செய்யுங்கள்:
மக்காவிற்கு செல்லும்போது அந்த ஆர்வத்திலும் பேரானந்தத்திலும் தக்வாவும், நல்லொழுக்கமுமே வழிந்தோடிக்கொண்டிருக்கும் நம்மிலிருந்து.... ஆனால் மக்காவை விட்டு திரும்பி வருகையில் செலவாகிப்போன பணத்தின் மேலேயே பாதி பேரின் மனம் இருக்கும்.... இதற்காகவா ஹஜ்???? இந்த ரிஜ்க்கிற்காகவா இந்த சோதனையை எதிர்கொள்கிறோம்?
(2:198) (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
5. சோஷியலைஸிங்.... இங்கேயுமா????:
முகப்புத்தகத்திலும், கூகிள் பிளஸ்ஸிலுமாக செலவு செய்யும் நேரத்தை, மக்களோடு பழகுகிறோம் என்னும் பெயரில் இங்கேயுமா சிதறடிக்க வேண்டும்??? குழுவாக போவதும், வருவதும், சேர்ந்து சில சம்பிரதாயங்களை முடிப்பதும் என பலதும் நன்மைதான்.... ஆனால் தனியே இபாதத்தை செய்யவும் நேரமொதுக்குங்கள். கிடைக்கும் தருவாயிலெல்லாம் ஒரு காலியிடத்தை தேர்ந்தெடுத்து குர்’ஆன் ஓதவோ, என்ன செய்ய இயலுமோ அதை செய்யவோ முனைந்து விடுங்கள். மக்காவிலிருந்து மினா செல்லும்போதும், மினாவிலிருந்து மக்கா வரும்போதும் அதிகமான நேரத்தை ஏதேனும் ஒரு இபாதத்திலேயே செலவழியுங்கள். இந்த நேரங்களில்தான் சோஷியலைஸிங் என்னும் பெயரில் அதிக நேரம் செலவாகும்... கட்டுப்படுத்துங்கள்....இன்ஷா அல்லாஹ்.

6. ஹஜ்ஜின் முக்கிய நோக்கமே அல்லாஹ்விற்கு சரணடைவது என்பதை மறக்காதீர்கள்! :
வாழ்க்கையில் இது வரை பார்த்திராத, கேட்டிராத, ஏன்...உங்களின் வாழ்விலோ, ஹஜ்ஜிலோ இப்படி நடக்கும் என்று நினைத்தே பார்த்திராத எல்லா சம்பவங்களும் ஹஜ்ஜில் நடக்கும்.... அதற்கு காரணம் ...ஹஜ்ஜும் ஒரு பெரிய சோதனையே.... சோதிக்காமல் நம் ஈமானை மெருகேத்த முடியாதே...!!



7. இறுதியாக, உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் பயணப்படுவதை, உலகிலிருந்தே பயணப்படுவதாக கற்பனை செய்யுங்கள்...!!:

உங்களின் பெருஞ்செல்வம், சொத்துக்கள், சொந்த பந்தங்கள், ஆருயிர் உறவுகள் என அனைத்தையும் ஒரு நாள் விட்டுப் போகத்தான் போகிறீர்கள்.... அதை மறக்காதீர்கள்.
(2:200)ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்.....
ஹஜ் மப்ரூர் (இறைப்பொருத்தம்) ஆகிவிட்டதா என்பதை இறைவனே அறிவான். ஆனால் அதற்கான சில சாட்சிகளை நாமும் அறிய நேரலாம்.... ஹஜ்ஜிற்கு பிறகு நம்மில் உள்ள குணநலன்களே....
“அல்ஹஜ் அல் மப்ரூர் என்பது இவ்வுலகை நிராகரித்தும், மறுமையை விரும்பியும் வாழும் ஓர் நிலையாகும். இந்த நேர்வையையே அல்லாஹ்,
மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.” (47:17) என்கிறான்” -- அல் ஹஸன் அல் பஸரி(ரஹி)
இந்த ஹஜ், ஹஜ் மப்ரூரா? நம்மில் ஏதும் மாற்றம் கொண்டோமா?? அல்லது லப்பைக்...அல்லாஹும்ம லப்பைக் என்னும் வார்த்தைகள் இன்னும் நாவில் ஈரமாய் இருக்கின்றனவா??? இன்னும் அல்லாஹ்வின் அருளை நாடியவர்களாகவே நாம் உள்ளோமா?? எந்த நிலையில் இருந்தோம், எந்த நிலை அடைந்திருக்கிறோம், இந்நிலைக்கு நாம் தகுதியானவர்கள்தானா??? இதற்கெல்லாம் பதில், இப்பொழுதே உங்களில்...!!

இந்த நிலைதான் இப்றாஹீம் (அலைஹ்) அவர்களின் வாழ்விலும் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இறைப்பொருத்தத்தை நாடினார். இன்று அவரின் காலடித்தடங்களில் நீங்கள் உள்ளீர்கள்..... அதே அரஃபாவிலும், மினாவிலும், மக்காவிலும் ஒவ்வொரு காரியமும் செய்யும் முன்னர் நினைத்துப் பாருங்கள், இப்றாஹீம் (அலைஹ்) என்ன செய்திருப்பார் என...

அல்லாஹ் உங்களனைவரின் ஹஜ்ஜையும் எளிதாக்குவானாக. பாதுகாப்பானதாக்குவானாக. உங்களனைவரின் இபாதத்தையும் கபூல் செய்வானாக. சிறியதிலிருந்து பெரும்பாவங்கள் வரை அனைத்தையும் மன்னிப்பானாக.... அன்று பிறந்த குழந்தையைப்போல் தூய்மையாக்குவானாக. ஆமீன்.



யாரெல்லாம் இந்த வருடம் ஹஜ்ஜுக்கு போக இயலவில்லையோ, இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரையின் நோக்கத்தைப் புரிந்து, அறிந்து அதன் வழி செல்ல இப்போதிலிருந்தே தயாராகுங்கள். காலம் தள்ளிப்போட்டுக்கொண்டெ இருக்காதீர்கள். இப்பொழுது வசதியிருந்தால் முந்தி விடுங்கள்.... இன்ஷா அல்லாஹ்...!

கண்டிப்பாக, நீங்கள் திரும்பி வந்ததும் உங்களிடம் வைக்கப்படும் முதல் கேள்வி, ஹஜ் எப்படியிருந்தது என்பதைப் பற்றித்தான்..... மனதொன்றி, இவ்வுலகின் கவலையற்று, ஆகிரத்தை(மறுமை வாழ்க்கை) மட்டுமே எதிர்பார்த்து ஹஜ் செய்திருப்பின், ‘அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது’ என்பதே உங்களின் பதிலாக இருக்கும்....

...அவ்வாறில்லாமல் ஹஜ்ஜை தொலைத்து விட்டிருந்தீர்களானால், “அந்த ஏஜென்சி வழியா மட்டும் போயிடாதீங்க...” என்பதே உங்களின் பதிலாககூடும்.... எந்த பதில் தருவது என்பது இப்போதே நீங்கள் திட்டமிடுவதில்தான் இருக்கிறது...!!

(47:19)ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக...
நன்றி : Posted by அன்னு 

No comments:

Post a Comment