
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுக்கு பொறுப்பு ஏற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பாராளு மன்றத்தில் தினமும் அமளி செய்து வருகின்றன.
பிரதமர் மன்மோகன்சிங் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள போதிலும் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா புதிய வியூகத்துடன் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி உள்ளார். அதன்படி இன்று காலை அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டினார். எம்.பி.க்களுக்கு ஆலோசனை தெரிவித்து அவர் பேசியதாவது:-
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நாம் எதையும் மறைக்கவில்லை. அதுபற்றி விவாதிக்க நாம் அழைத்தும் பாரதீய ஜனதா தினமும் பாராளுமன்றத்தை முடக்கி வருகிறது. பாரதீய ஜனதாவின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது.
பணத்துக்காக அவர்கள் பாராளுமன்றத்தை முடக்கும் பிளாக்மெயில் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க.வின் இத்தகைய எதிர்மறையான அரசியலுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அவர்களது பிளாக்மெயில் அரசியலுக்கு பயப்படாதீர்கள். உடனுக்குடன் தக்க பதிலடி கொடுங்கள்.
பாரதீய ஜனதா கட்சி தலைவர்களின் விமர்சனங்கள் மிதமிஞ்சியதாக உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நாம் நிறைய லாபம் அடைந்து விட்டதாக அவர்கள் பேசுகிறார்கள். இத்தகைய விமர்சனங்களுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியது அவசியமானது.
பாரதீய ஜனதா தலைவர்கள் நயவஞ்சக விளையாட்டை நடத்துகிறார்கள் அவர்களது இந்த செயல்பாடு ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்துள்ள குறைவான மதிப்பையே காட்டுகிறது. அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். வரும் தேர்தலில் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகுங்கள்.
இவ்வாறு சோனியா பேசினார்.
பாரதீய ஜனதா பற்றி சோனியா கடுமையாக விமர்சனம் செய்து இருப்பதற்கு பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில். பொறுப்பு பற்றி எங்களுக்கு காங்கிரஸ் சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு அவர்கள் பொறுப்பான பதில் சொல்ல வேண்டியதே அவசியமாகும் என்றார்.
No comments:
Post a Comment