அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று முதல் செப்டெம்பர் 9ம் திகதி வரை நடக்கிறது.
இதில் பெடரர், ஜோகோவிச், செரினா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
ஆடவர் ஒற்றையரில் உலகின் “நம்பர்-1” வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
விம்பிள்டன் தொடரில் பட்டம் வென்ற பெடரர், லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். விம்பிள்டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முர்ரே, லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.
இவர்கள் இருவரும் ஒரே பிரிவில் இடம் பிடித்திருப்பதால், அரையிறுதியில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை ஐந்து முறை பட்டம் வென்றுள்ள பெடரர், இம்முறை மீண்டும் பட்டம் வெல்லும் பட்சத்தில், அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் அமெரிக்காவின் பீட் சாம்பிரஸ் (5 முறை), ஜிம்மி கானர்ஸ் (5 முறை) ஆகியோரை பின்தள்ளி இரண்டாவது இடம் பிடிக்கலாம்.
மற்றொரு நட்சத்திர வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால், காயம் காரணமாக இம்முறை பங்கேற்கவில்லை. இதனால் மற்றொரு ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர், நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment