
காலாண்டு, அரையாண்டு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இதனால் பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் மிகவும் சிரமத்துடன் சந்திக்க நேரிடுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதைத் தொடர்ந்து காலாண்டு, அரையாண்டு தேர்வையும், பொதுத்தேர்வை போல நடத்த முடிவு செய்யப்பட்டது. வினாத்தாள்களை அரசுத் தேர்வுத்துறை தயாரித்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பாடவாரியாக வினாத்தாள்களை தேர்வுத்துறை தயாரித்து சி.டி. மூலம் ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியது. அவர்கள் பிரிண்ட் எடுத்து பள்ளிகளுக்கு வினியோகம் செய்தனர்.
பள்ளி பொதுத்தேர்வை சீர்படுத்தும் வகையில் மாணவர்கள் பதட்டம் இல்லாமல் குழப்பம் அடையாமல் தேர்வு எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் இன்று தொடங்கிய காலாண்டு தேர்வில் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்று ஒரே சீராக நடைபெற்றது. பொதுத்தேர்வை போல கேள்வித்தாளை படித்து பார்க்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
காலை 10.15 மணிக்கு தேர்வு துவங்கி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12.45 மணிக்கும், பிளஸ்-2 மாணவர்களுக்கு 1.15 மணிக்கும் முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வை 10.75 லட்சம் பேரும், பிளஸ்-2 தேர்வை 7.5 லட்சம் பேரும் எழுதினார்கள்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் இன்று வழக்கம்போல தேர்வு தொடங்கியது. முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை ஒரே கால அட்டவணையில் காலாண்டு தேர்வுகள் முதன் முதலாக தற்போது நடக்கிறது.
No comments:
Post a Comment