click me

Monday, September 3, 2012

ஹாட்ரிக் சாதனை படைத்த இந்தியா; நேரு கிண்ண கால்பந்து சாம்பியன்

நேரு கிண்ண கால்பந்து தொடரில், இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.
15வது நேரு கிண்ண சர்வதேச கால்பந்து தொடர் இந்திய தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று வந்தது.
நேற்று நடந்த இறுதிச்சுற்றில் தரவரிசையில் 168வது இடத்தில் உள்ள இந்தியா, 59வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த ஆப்ரிக்க அணிகளில் ஒன்றான கேமரூன் பி அணியை சந்தித்தது.
போட்டியின் தொடக்கத்தில் கேமரூன் வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவர்கள் அதிக நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் கிடைத்த பிரி கிக் வாய்ப்பில் இந்திய வீரர் கிலிபோர்டு மிராண்டா பாஸ் செய்த பந்தை சக வீரர் கவுர்மாங்கி தலையால் முட்டி முதல் கோல் அடித்தார்.
இம்மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கேமரூன் வீரர் மகோன் தியரி கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் முடிந்தது.
இரண்டாவது பாதியில் தொடர்ந்து அசத்திய கேமரூன் அணிக்கு 54வது நிமிடத்தில் கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் மகோன் தியரி அடித்த பந்தை கிங்யு மபோன்டோ தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் கோல் அடிக்க, இந்திய அணித்தலைவர் சுனில் சேத்ரி மின்னல் வேகத்தில் பறந்தார். இவரை கேமரூன் கோல்கீப்பர் நிகசி ஹோசியா முரட்டுத்தனமாக மடக்கினார்.
இதையடுத்து பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை சுனில் சேத்ரி கோலாக மாற்றி நம்பிக்கை தந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்று சமநிலை வகித்ததால், கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட்டது. இதில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டியின் முடிவு பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.
இதில் இரு அணியினருக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்படும். போதிய அனுபவமில்லாத கேமரூன் கோல் கீப்பர் நிகசி ஹோசியாவுக்கெதிராக இந்தியா சார்பில் ராபின் சிங், அணித்தலைவர் சுனில் சேத்ரி, டென்சில் பிரான்கோ, மேத்தா ஹுசைன், கிலிபோர்டு மிராண்டா ஆகியோர் தங்களது வாய்ப்பை கோலாக மாற்றினர்.
கேமரூன் சார்பில் அஷு டாம்பே, அவுஸ்மிலா பாபா, பால் பெபே, கிங்யு மபோன்டோ ஆகியோர் தங்களது வாய்ப்பை கோலாக மாற்றினர்.
கடைசி வாய்ப்பில், கேமரூன் வீரர் மகோன் தியரி மிஸ் பண்ண, இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று, கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது.
இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக (2007, 2009, 2012) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
நேரு கிண்ண அரங்கில் ஹாட்ரிக் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. முன்னதாக சோவியத் யூனியன் அணி தொடர்ந்து நான்கு முறை (1985-88) கிண்ணம் வென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment